பிரதமர் மோடியை விமர்சித்து கட்டுரை எழுதியதற்காக சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் எம்.பி.யான சஞ்சய்ராவத் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சிவசேனா கட்சி உத்தவ் அணி மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணி என இரண்டாக பிரிந்து உள்ளது.
இந்த நிலையில், சிவசேனா உத்தவ் அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், பிரதமர் மோடியை கடுமையாக விமர்ச்சித்து ‘சாம்னா’ பத்திரிகையில் கட்டுரை எழுதியிருந்தார். இந்த கட்டுரைக்காக சஞ்சய் ராவத் எம்.பி மீது யவத்மால் மாவட்ட பாஜக தலைவர் நிதின் புட்டாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், உமர்கீத் போலீஸார், சஞ்சய் ராவத் எம்.பி மீது தேசத்துரோக வழக்கு, இரு பிரிவினரிடையே மோதலை உண்டாக்குதல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.