• Sun. Feb 9th, 2025

மஹா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா

ByP.Thangapandi

Feb 3, 2025

உசிலம்பட்டி அருகே 50 ஆண்டு பழமை வாய்ந்த மஹாகணபதி ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வின்னகுடி கிராமத்தின் மையப்பகுதியில் மஹா கணபதி ஆலயம் அமைந்துள்ளது.

50 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 51 அடி உயரத்தில் கோபுரம் எழுப்பி கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக சிவாச்சாரியார்கள் கணபதி யாகபூஜையுடன் துவங்கி மூன்று கால யாக பூஜைகள் செய்து உருவேற்றி கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து தீயணைப்புத்துறை வாகனம் மூலம் பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

பின்னர் கணபதி சிலைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களை செய்து சிறப்பு அரங்காரத்தில் பூஜை செய்தனர்.

இந்த கும்பாபிஷேக விழாவிற்கு உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.