மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே, ஜதி பல்லக்கு ஊர்வலத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், 2 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார் என பாராட்டு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, வசை பாடுபவர்களையும் வாழ்த்த செய்யும் அரசாக முதலமைச்சர் தலைமையில் செயல்பட்டு வரும் அரசாக உள்ளது. முன்னாள் அமைச்சர் மட்டுமல்ல, நீதிபதிகள் பாராட்டும் அரசாக தமிழக அரசு உள்ளது. பாரதியாரின் படைப்புகளை டிஜிட்டல் வடிவில் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.
“தவறு செய்வது தன்னுடைய கட்சியை சார்ந்தவர்கள் என்றாலும் உடனடியாக திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளில் ஈடுப்பட்ட தமிழக காவல்துறைக்கு பல்வேறு இடங்களில் பாராட்டு கிடைத்தது. காவல்துறை சிறப்பாக செயல்படுவதற்கு இதுவே சான்று, பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது போல் காவல்துறை ஏவல்துறையாக செயல்படவில்லை” என விளக்கமளித்தார்.
மேலும், மழை, புயல், வெள்ளத்திற்கு பிறகும் 34 நாட்களாக முதலமைச்சர் களத்தில் உள்ளார். அண்டை மாநில பத்திரிகைகள் பாராட்டும் அளவிற்கு முதலமைச்சர் செயல்படுவது தமிழகத்திற்கு பெருமை என்றும் நீதியரசர் புகழேந்தி கூறியது போல் பாராட்டாவிட்டாலும் வசை பாடாமல் இருக்கலாம் என கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எதிர்காலத்தில் திமுகவோடு இணைந்து செயல்படுவாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “அனைத்து தரப்பினரும் முதலமைச்சரை பின்பற்றமளவிற்கு அவரது செயல்பாடு உள்ளது.
அந்த வகையில், யார் வேண்டுமானாலும் திமுகவில் இணைந்து செயல்படலாம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் எதிர்காலத்தில் எங்களோடு இணைந்து செயல்படுவது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்த செய்திகள் வெளிவந்த உடனே மாஃபா.பாண்டியராஜன் திமுகவில் இணைய போவதாக செய்திகள் காட்டுத்தீபோல பரவ ஆரம்பித்தது.இந்த செய்தி அதிமுக தலைமைக்கும் சற்று கலக்கத்தை கொடுத்தது. மாஃபா.பாண்டியராஜன் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தனது பிஸினஸில் கவனம் செலுத்த தொடங்கியதால், பெரிய அளவில் அதிமுகவில் செல்வாக்கு இல்லாவிட்டாலும் தொடர்ந்து அதிமுகவில் முக்கிய கைகள் வெளி வருவது அக்கட்சியின் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்று கருதுகின்றனர்.
ஆனால் இந்த வியூகம், யூகங்களுக்கு மாஃபா.பாண்டியராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார்.தான் திமுக இணைய உள்ளதாக பரவி வரும் செய்தி உண்மை இல்லை. நான் என்றும் அதிமுகவின் விசுவாசி என்று தான் பெருமையடைந்து வருகிறார்.