குடியரசு தின அலங்கார ஊர்தியை மதுரை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்! மதுரை வண்டியூர் தெப்பக்குளம் பகுதியில் ஜனவரி 31ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக தற்போது அலங்கார ஊர்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
”விடுதலைப் போரில் தமிழகம்” என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்ற அலங்கார ஊர்தி மதுரை வண்டியூர் தெப்பக்குளம் பகுதிக்கு இன்று மாலை வருகை தந்து பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது ,இதனை காண ஏராளமான மக்கள் தெப்பகுளத்தில் கூடினர்.
பொதுமக்கள் மேள தாளம் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம் சுற்றி, ஆடிப்பாடி, மலர் தூவி ஊர்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் ஆகியோர் மலர் தூவி ஊர்தியை வரவேற்றனர்.
மதுரை வந்துள்ள ஊர்தியில் வேலூர் சிப்பாய் புரட்சி, மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், வீராங்கனை குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், ஒண்டிவீரன், புலித்தேவன், அழகு முத்துக்கோன், காளையார்கோவில் கோபுரம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஊர்தி தற்போது மதுரை வண்டியூர் தெப்பக்குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது , ஜனவரி 31ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப் படவுள்ளது. அங்கு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.