தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.,19ம் தேதி அமைதியாக நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்று பிப்.22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. கொரோனா தொற்று பாதித்தவர்கள் மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை வாக்களித்தனர். 11 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்தது.
தமிழகத்தில் மொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70 சதவீகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரையை பொறுத்தவரை மொத்தம் மாநகராட்சியில் 100 வார்டுகள், 9 பேரூராட்சி, 3 நகராட்சி உள்ளன. இதில் மூன்றையும் சேர்த்து மொத்தம் 322 வார்டுகள் உள்ளன. மொத்த வாக்காளர் எண்ணிக்கை 15 லட்சத்து 72 ஆயிரத்து 086 பேர் , இதில் ஆண் வாக்காளர்கள் 7லட்சத்து 70 ஆயிரத்து 602, பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து ஆயிரத்து 333, மூன்றாம் பாலினத்தவர்கள் 151 பேர் உள்ளனர்.
இதில் 8 லட்சத்து 97 ஆயிரத்து 450 பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 3 நகராட்சிகளில் 71.33 சதவீத வாக்குகள், 9 பேரூராட்சியில் 79.42 சதவீத வாக்குகளும் , மாநகராட்சி வார்டுகளில் 53.99 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது. மேலும் நகர்புறத்தை ஒப்பிடும் போது கிராமப்புறங்களில் அதிகளவில் பெண்கள் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர். மதுரையில் மொத்தமாக 57.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.