மும்பையில் இருந்து கோவாவிற்கு இயக்கப்பட்டு வரும் ஆடம்பர சொகுசு கப்பலில்போதை பாரட்டி நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வாங்கடே தலைமையில் அதிகாரிகள் சாதாரண பயணிகள் போன்று டிக்கெட் எடுத்து கப்பலில் பயணம் செய்தனர்.
மும்பையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் பார்ட்டி ஆரம்பமானது. இதில் நடிகர்கள், நடிகர்களின் மகன்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பார்ட்டியில் அனைவரும் ஹசிஷ், எம்டி, கோகைன் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தினர். இதையடுத்து அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி போதைப்பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள், போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் என மொத்தம் 10 பேரை அதிகாரிகள் பிடித்தனர்.
பிடிபட்டவர்களில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானின் மகன் மற்றும் பாலிவுட் நடிகர் ஒருவரும் பிடிபட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஷாருக்கான் மகன் ஆர்யான் கானிடம் விசாரித்தபோது, பார்ட்டியில் பங்கேற்க தான் பணம் எதுவும் கொடுக்கவில்லை என்று தெரிவித்ததாகச் சொல்கிறார்கள்.
இப்போதை பார்ட்டி தொடர்பாக விசாரிக்க சொகுசு கப்பல் உரிமையாளர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பார்ட்டி நடந்த கப்பல் மீண்டும் மும்பைக்கே திரும்பக் கொண்டு வரப்பட்டு, கப்பலிலும் அதிகாரிகள் பல மணி நேரம் சோதனை நடத்தினர். பிடிபட்ட அனைவரையும் மும்பைக்குக் கொண்டு வந்து அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டனர்.