மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமாக ரூ10,000 வழங்கவேண்டும் என ஓபிஎஸ் தனது அறிக்கை மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் …..2,381 எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதி அளித்தும், அவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயித்தும் பள்ளிக்கல்வித்துறை ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில், மேற்படி சிறப்பாசிரியர்களுக்கான மாதச் சம்பளம் 5,000 ரூபாய் என்றும், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அவர்களுக்கு போதுமான கல்வித் தகுதி இல்லையென்றால் தொடக்கக் கல்வியில் பட்டயம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அவர்களுடைய பணிக்காலம் 11 மாதங்கள் மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்பு ஆசிரியர்களுக்கான ஊதியத்தை குறைந்தபட்சம் 10,000 ரூபாயாக உயர்த்தவும், 11 மாதம் என்ற கால அளவை ரத்து செய்யவும், மேற்படி வகுப்புகளுக்கு நிரந்தரமாக, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.