நற்றிணைப் பாடல் 165:
அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது
பணைத்த பகழிப் போக்கு நினைந்து கானவன்
அணங்கொடு நின்றது மலை வான் கொள்க எனக்
கடவுள் ஓங்கு வரை பேண்மார் வேட்டு எழுந்து
கிளையடு மகிழும் குன்ற நாடன்
அடைதரும்தோறும் அருமை தனக்கு உரைப்ப
நப் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு
அன்ன ஆகுக என்னான்
ஒல்காது ஒழி மிகப் பல்கின தூதே
பாடியவர்: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
திணை: குறிஞ்சி
பொருள்:
வேட்டையாடும் போரில் ஆமான் பசுவைக் கொல்ல எய்த நீண்ட அம்பு (பகழி) அதன் உடம்பில் (நிறம்) பாயாமல் சென்றுவிட்டதைக் கானவன் எண்ணினான். கடவுள் ஓங்கி நிற்கும் மலையைப் பேண விரும்பினான். வானம் பொழியவேண்டும் என அணங்குத் தெய்வத்தைத் (கொற்றவையை) வழிபட்டான். தன் இனத்தவரைக் கூட்டி வழிபட்டான். மகிழ்ச்சியுடன் வழிபட்டான். இப்படிப்பட்ட குன்றத்தை உடையவன், தலைவன் குன்றநாடன். அடைக்கலம் (அடை) தரும்போதெல்லாம் அடைக்கலப் பொருளின் அரிய பண்புகளைக் கூறுவார்கள். நம்மோடு இணங்கி இல்லாதவர் நட்பு நமக்கு வேண்டாம் என்று ஒதுக்காமல் மணந்துகொள்கிறேன் என்று அவன் தூது விடுத்திருக்கிறான். தோழி, நீ தளர்ச்சி அடைய வேண்டாம். தோழி தலைவிக்குக் கூறுகிறாள்.