நற்றிணைப் பாடல் 167:
கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினை
விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின் ஆஅய்
வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற
பண் அமை நெடுந் தேர்ப் பாணியின் ஒலிக்கும்
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த
பயன் தெரி பனுவற் பை தீர் பாண
நின் வாய்ப் பணி மொழி களையா பல் மாண்
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம்
மணம் கமழ் கானல் மாண் நலம் இழந்த
இறை ஏர் எல் வளைக் குறுமகள்
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே
பாடியவர்: ஆசிரியர் பெயர் இடம்பெறவில்லை
திணை: நெய்தல்
பொருள்:
கருநிறக் கிளைகளை உடையது புன்னை மரம். விருந்தாளியாக வந்த குருகு அந்த மரத்தில் வளைந்திருக்கும் பெரிய கிளையில் இருந்துகொண்டு குரல் எழுப்பும்.
ஆய் அரசன் அவையில் பரிசில் பெற்றவர்கள் அவன் தந்த தேரில் செல்வர். அந்தத் தேரின் மணியொலி கேட்பது போலக் குருகுப் பறவை ஒலிக்கும். இப்படிக் குருகு ஒலிக்கும் துறையை உடையவன் துறைவன். பாண! அந்தத் துறைவனின் தூதுச் செய்தியோடு வந்திருக்கிறாய். யாழ் மீட்டும் செய்தி கொண்ட பனுவல் (நூல்) அறிந்தவன் நீ. இவள் துன்பம் தீர மொழிகிறாய். பணிவுடன் மொழிகிறாய், திரும்பத் திரும்பச் (பன்மாண்) சொல்கிறாய்.
ஞாழல், புன்னை ஆகியவற்றின் புதுப் பூக்கள் கொட்டிக் கிடக்கும் கானல் நிலப் பரப்பில் என் தலைவி தன் மாண்பு மிக்க பெண்மை நலத்தை இழந்தாள். இப்போது தோள் வளையலை இழந்திருக்கிறாள். பசப்பு பாய்ந்து நெற்றி அழகை இழந்திருக்கிறாள். இதுதான் அவளுக்கு மிச்சம். தூது வந்த பாணனிடம் தோழி இவ்வாறு கூறுகிறாள்.