• Thu. May 9th, 2024

கொலை சர்வதேச தரத்தில் இருக்கும் – நாயகன் விஜய் ஆன்டனி

Byதன பாலன்

Jul 20, 2023

“உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இன்று வெளியாகி உள்ள ‘கொலை’ படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்களின் கருத்துகளைக் கேட்க ஆர்வமாக உள்ளேன்” என்கிறார் விஜய் ஆண்டனி!

தமிழ் திரைப்படத் துறையில் புதுப்புது இயக்குநர்களின் திறமைகளைக் கண்டறிந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நடிகர் விஜய் ஆண்டனியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

உலகம் முழுவதும் இன்றுவெளியான ‘கொலை’ படத்தின் இயக்குநரான இயக்குநர் பாலாஜி குமாருடன் பணி புரிந்த அனுபவத்தைப் பற்றி விஜய் ஆண்டனி கூறியிருப்பதாவது

“தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி த்ரில்லர்களின் சிறந்த ரசிகன். சந்தேகத்திற்கு இடமின்றி இது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர்தான்.

இயக்குநர் பாலாஜி குமார் என்னிடம் ஸ்கிரிப்டை விவரித்தபோது கதைக் களம் மற்றும் என் கதாபாத்திரம் இரண்டுமே மிகவும் வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். ஒவ்வொரு நடிகரும் தனது சினிமா கேரியரில் ஒரு முறையாவது இது போன்ற கேரக்டரில் நடிக்க விரும்புவார்கள். அது போன்ற ஒரு வாய்ப்பை இந்தக் ’கொலை’ படம் எனக்கு வழங்கியதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இது தனக்குள்ளேயே உள்ள குழப்பமான சவால்களை எதிர்த்துப் போராட வேண்டிய, மர்மத்தை உடைக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம். அது மட்டுமின்றி, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ளது.

இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகத் திறமையானவர்கள். முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்த நடிகை ரித்திகா சிங், அடுத்தடுத்த தனது படங்களில் நடிப்பின் புதிய பரிமாணங்களை காட்டி வருகிறார். இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் வெளியான பிறகு மீனாட்சி சவுத்ரிக்கு அதிக ரசிகர் பட்டாளம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர் என அனைவருமே இந்தக் ‘கொலை’யை தங்களது நடிப்பால் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்தக் ’கொலை’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வந்தால், அதைக் காண நானும் ஆர்வமாக உள்ளேன். எங்கள் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இந்த யோசனையை தெரிவித்துள்ளனர். விரைவில் இது குறித்து வரும் காலத்தில் அறிவிப்போம்..” என்றார்.

இந்தக் ’கொலை’ திரைப்படத்தை இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த மிஸ்ட்ரி திரில்லர் கதைக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாலாஜி குமார் எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங் தவிர, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *