கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் கேரள பாதிரியார் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் பாதிரியார் பிரான்கோ முல்லக்கல்.
இவருடன் பணியாற்றிய கன்னியாஸ்திரியை 2013 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2018ல் போலீசார் வழக்கு பதிவு செய்து பாதிரியாரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பாதிரியார் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து கிடைத்த ஜாமினில் வெளியே இருந்து வந்தார்.கோட்டயம் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் 2019ல் துவங்கிய விசாரணை சமீபமாக 100 நாட்கள் தொடர்ந்து நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபக்குமார் இன்று (ஜன.14 ) தீர்ப்பளித்தார். போதிய ஆதாரங்கள் இல்லாததால், பாதிரியார் பிரான்கோ முல்லக்கல் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பானது ஒரே வரியில் “குற்றவாளி குற்றமற்றவர் என அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார் ” என்று எழுதப்பட்டுள்ளது. இதனை நீதிபதி ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் வாசித்தார். தீர்ப்பையொட்டி கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.தீர்ப்பு குறித்து பத்திரிகையாளர்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டனர். இதற்கு ” Praise the Lord ” என கையை அடக்கமாக கட்டி நின்றபடி ஒரு வரியில் பதில் அளித்தார்.