

முல்லை பெரியாறு அணையில் பேபி அணைக்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி அளித்தநிலையில் அம்மாநில முதலமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முல்லை பெரியாறு அணையில் பேபி அணைக்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி அளித்ததற்கு நன்றி எனவும், பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த இந்த நீண்ட கால கோரிக்கை மிகவும் முக்கியமானது என்றும் மேலும், கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்க இந்த அனுமதி உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அனுமதி இரு மாநில மக்களுக்கும் நீண்ட காலத்துக்குப் பயன் அளிக்கும் வகையில் அமையும் என்றும், இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நல்லுறவு மேலும் வலுப்பட வழிவகுக்கும் என நம்புவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
