கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் மேலும் பல ஊராட்சிகளை அதில் இணைக்க கூடாது என அதிமுக எம்.எல்.ஏ தளவாய்சுந்தரமும், பாஜக எம்.எல்.ஏ காந்தியும் கூட்டாக இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தளவாய் சுந்தரம் பேசியதாவது: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே 15 தினங்களுக்கு ஒரு முறை தண்ணீர் வரும் நிலையில், தற்போது கூடுதலாக பல ஊராட்சிகளை இணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இதனால் மாநகராட்சியில் புதிதாக இணையும் பகுதிகளுக்கு குடிநீர் பிரச்சனை ஏற்படும். எனவே அதனை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ஊராட்சி பகுதிகளில் மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தால் பலர் பயனடைந்து வரும் நிலையில், பல ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும். இதேபோன்று மண்பாண்டம் தயாரிப்பு, செங்கல் சூளை ஆகியவற்றை நம்பி லட்சக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர், எனவே அவர்களுக்கு குளங்களில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.