• Mon. Apr 21st, 2025

இது இந்தியாவின் பட்ஜெட்டா, பீகார் பட்ஜெட்டா? – கனிமொழி எம்.பி கடும் விமர்சனம்

ByP.Kavitha Kumar

Feb 1, 2025

என் நாடாளுமன்ற அனுபவத்தில் முதன்முறையாக, பீகார் மாநில பட்ஜெட்டை, நாடாளுமன்றத்தில் கேட்டேன் என திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். 8வது முறையாக இன்று அவர் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகளை அவர் அறிவித்திருக்கிறார்.

ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் மற்ற மாநிலங்களை விட பீகார் மாநிலத்திற்குத்தான், அதிகமான சலுகைகளை அறிவித்தார். பீகார் மாநிலத்தைப் போல வேறு எந்த மாநிலத்தின் பெயரையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவ்வளவாக குறிப்பிடவில்லை.

கடந்த 2020-ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது உருவான பாஜக கூட்டணி, பீகார் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பீகார் மாநிலத்திற்கு மத்திய பட்ஜெட்டில் அடுத்தடுத்து புதிய திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளதாக பல்வேறு கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம், புதிய விமான நிலையங்கள், தாமரை விதைகளுக்கு புதிய வாரியம் உள்ளிட்ட திட்டங்களை பீகார் மாநிலத்திற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், நான் நாடாளுமன்றத்தில் இருந்த இத்தனை ஆண்டுகளில், பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது இதுவே முதல் முறை” எனப் பதிவிட்டுள்ளார்.