• Mon. May 12th, 2025

கள்ளக்குறிச்சி மாணவி இறந்த வழக்கு… கடிதத்தில் என்ன இருந்தது…

Byகாயத்ரி

Jul 19, 2022

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் எதிர்பாராத அளவுக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதனால் பெற்றோர்களிடையே சலசலப்பு நிலவி வருகிறது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே யோசிக்கும் அளவிற்கு இச்சம்பவம் ஆழமாகியுள்ளது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியை சுற்றிய பகுதிகளில் நேற்று முன் தினம் பெரும் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், இறப்பிற்கு பள்ளி நிர்வாகமே காரணம் என்றும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மாணவி எழுதிய கடிதம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், “நான் நன்றாகத்தான் படிப்பேன், வேதியலில் நிறைய எனக்கு சமன்பாடு படிக்கவே வரவில்லை. அதனால் வேதியியல் ஆசிரியர் மிகவும் அழுத்தம் கொடுக்கிறார். ஒருநாள் வேதியியல் ஆசிரியர் கணித ஆசிரியரிடம் நான் நன்றாக படிக்கவே மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். அதனால் அவர்களும் எனக்கு அழுத்தம் தர ஆரம்பித்தனர். விடுதியில் படிக்கவே மாட்டேங்கிறாயா என கேள்வி எழுப்பி என்னை திட்டினார்.எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் படிப்பதே இல்லை என இந்த இரண்டு ஆசிரியர்களும் சேர்ந்து அனைத்து ஆசிரியர்களிடமும் என்னைப் பற்றி அவதூறாக கூறியுள்ளனர். இன்று காலை ஒரு ஆசிரியர் சரியாக படிக்கவில்லையா? என என்னிடம் கேள்வி எழுப்பினார். விளையாட்டுத்தனமாகவே இருக்கிறாய் என கூறினார். கணிதம் மற்றும் வேதியியல் ஆசிரியர்கள் இருவரும் சேர்ந்து எனக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கணித ஆசிரியர் என்னை மட்டும் அல்ல சக மாணவர்களையும் தொல்லை செய்கிறார். சாந்தி மேடம் உங்களுக்கு ஒரே ஒரு கோரிக்கை.

எனக்கு இந்த ஆண்டு கட்டப்பட்ட அனைத்து கல்வி கட்டணத்தையும் எனது அம்மாவிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். புத்தக கட்டணம், விடுதி கட்டணம் என அனைத்தையும் கொடுத்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் நான் கொஞ்ச நாள் தான் விடுதியில் தங்கியிருந்தேன் ப்ளீஸ்! சாரி அம்மா… சாரி அப்பா’ என்று எழுதியுள்ளார் ஸ்ரீமதி. மாணவி ஸ்ரீமதி எழுதியதாக கூறப்படும் கடிதம் தனது மகளின் கையெழுத்தே இல்லை என ஸ்ரீமதியின் பெற்றோர்கள் அடித்துக்கூறி மறுத்துள்ளனர்.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.இக்கடிதம் வெளியான பின் பலரது மனதும் சோகத்தில் உரைந்து போயுள்ளது.