• Sat. Apr 20th, 2024

ஆ.ராசா பேச்சுக்கு கி.வீரமணி அறிக்கை..!

ByA.Tamilselvan

Sep 20, 2022

“கருத்தை கருத்தால் சந்திக்கத் திராணி இல்லாத தில்லுமுல்லு திருகுதாளப் பேர்வழிகளே, உங்கள் வித்தைகள் பெரியார் மண்ணில் எடுபடாது” என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை பெரியார் திடலில் கடந்த 6-ம் தேதி ‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய எம்பி ஆ.ராசா உரையை திரித்து, வெட்டி, பாஜக, ஆர்எஸ.எஸ் – பார்ப்பன மற்றும் அவர்களது அடிவருடிகளின் கூட்டணி, எதிர்ப்பு பிரச்சாரம் என்ற போர்வையில் திமுகவுக்கு எதிராகத் திட்டமிட்ட கோயபல்ஸ் பிரச்சாரத்தை சமூக வலை தளங்களிலும், சில பத்திரிகைகளும் தொடர்ந்து எழுதியும், பேசியும், நடத்தியும் வருகின்றன.
மனுதர்மத்தில் உள்ள சூத்திர, பஞ்சமன் என்ற அர்த்த விளக்கம் எவ்வளவு மானக் கேடானது. பெரும்பான்மையான உழைக்கும் நமது இன மக்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் சொல் என்பதைத்தான் அவர் சுட்டிக்காட்டிப் பேசினார்.
அதற்காக, வழக்குப் போட்டு அவரை நீதிமன்றத்துக்கு அழைத்தாலும், அதை எதிர்கொண்டு மனுதர்மம், கீதை போன்ற சாதியை வலியுறுத்தும், பெண்களைக் கொச்சைப்படுத்தும் பல இந்து மத சாஸ்திரங்கள், தர்ம விளக்கம் பற்றி நீதிமன்றத்திலேயே அலசி சுட்டிக்காட்ட அவரும் தயார்.
அவர் சார்பில் பெரியார் தொண்டர்களாகிய நாமும் தயார். கருத்தை கருத்தால் சந்திக்கத் திராணி இல்லாத தில்லுமுல்லு திருகுதாளப் பேர்வழிகளே, உங்கள் வித்தைகள் பெரியார் மண்ணில் எடுபடாது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *