தமிழக கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுவது தேவையற்றது என, புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
புதுவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவர்னர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசும் போது..:- புதுவையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கடல் மேலாண்மைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. 100 படுக்கைகளுடன் போதை மறு வாழ்வு மையம் அமைய உள்ளது. அரசு சாரா அமைப்புகள் தவறான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழக கவர்னரைத் திரும்பப் பெற வேண்டும் என சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுப்பது தேவையற்றது. கவர்னருக்கு அவரது கருத்தைக் கூற உரிமையுள்ளது. அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால், எதிர்க்கருத்தைக்கூறலாம். கவர்னர் ஒரு கருத்தைக் கூறிவிட்டார் என்பதற்காக, அவரைத் திரும்பப் பெற வேண்டும் என்பது சரியல்ல. சாதாரண குடிமகன் முதல் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.