தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற கும்மி நடனத்தை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
தமிழர்களின் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் தஞ்சை பெரியக்கோவிலை காண தஞ்சை மட்டுமின்றி பிற மாவட்டங்கள் அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். வழக்கமாக வேலை நாட்களில் வரும் கூட்டத்தை விட விடுமுறை நாட்களில் அதிகளவில் பெரிய கோயிலுக்கு கூட்டம் வரும். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறையால் தற்போது தஞ்சை பெரிய கோவிலின் அழகை காணவும், பெருவுடையாரை தரிசனம் செய்யவும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து இருந்து பக்தர்கள் பெருவுடையாரை தரிசனம் செய்து சென்றனர். தஞ்சையில் சுட்டெரித்து வரும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெரிய கோயிலின் அழகை பார்த்து ரசித்தனர். மேலும் கோயிலுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அங்கிருந்த பெண்கள் தமிழகத்தின் தொன்மையான கலையான கும்மி அடித்தலை செய்தனர். இக்கலையை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.