டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக, 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் வாகனப் போக்குவரத்து, கட்டுமான நடவடிக்கை, பயிர்க்கழிவுகளை எரிப்பது போன்றவற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக காற்று மாசின் அளவு அபாய நிலையை எட்டியுள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் மூச்சுவிடுவதற்கே சிரமப்படும் நிலை காணப்படுகிறது. இந்த நிலையில், மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாகனப் பயன்பாட்டை குறைக்க அரசு பணியில் உள்ள 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே பணியாற்றும்படி டெல்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் இதே முறையை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், அத்தியாவசி சேவைகளான, சுகாதாரம், பொது போக்குவரத்து, துப்புரவு, தீயணைப்பு, சட்ட அமலாக்கம், மின்சாரம், தண்ணீர் சுத்திகரிப்பு, அவசர கால சேவை உள்ளிட்ட துறைகள் தொடர்ந்து முழு பணியாளர் திறனில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த துறைகளில் அனைத்து பணியாளர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி மாநகராட்சி உட்பட 80 துறைகள் மற்றும் பல்வேறு ஏஜென்சிகளைக் கொண்ட டெல்லி அரசில் 1.4 லட்சம் பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் 50சதவீத அரசு பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவு
