பொது சிவில் சட்டம் என்பது ஜனசங்கம் காலத்தில் இருந்து பாஜக அளித்து வரும் வாக்குறுதி ஆகும். எனவே இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக உறுதியாக இருக்கிறது என்று, மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.
பொது சிவில் சட்டம் என்பது ஜனசங்கம் காலத்தில் இருந்து பாஜக அளித்து வரும் வாக்குறுதி ஆகும். எனவே இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக உறுதியாக இருக்கிறது என்று, மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஆங்கில செய்தி சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர், “பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்பது ஜனசங்க காலத்தில் இருந்து மக்களுக்கு பாஜக அளித்து வரும் வாக்குறுதி ஆகும். எனவே, பொது சிவில் சட்டம் கொண்டுவர பாஜக உறுதி பூண்டுள்ளது.
ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதம் நடத்துவது அவசியம். இந்தப் பிரச்சினை குறித்து வெளிப்படையான, ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும். அந்த விவாதம் முடிந்த பிறகு அந்தச் சட்டத்தை கொண்டு வருவோம். பாஜக ஆட்சி நடக்கும் உத்தரகாண்ட், இமாசலச்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள், பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்துள்ளன. அந்த குழுக்கள் அளிக்கும் சிபாரிசுகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். பொது சிவில் சட்டத்தை பாஜக மட்டும் ஆதரிக்கவில்லை. அதை உரிய நேரத்தில் கொண்டு வருமாறு நாடாளுமன்றத்துக்கும், மாநிலங்களுக்கும் அரசியல் நிர்ணய சபை அறிவுரை கூறியுள்ளது. அதை எல்லோரும் மறந்து விட்டனர். நாடும், மாநிலங்களும் மதச்சார்பற்றதாக இருக்கும்போது, ஒவ்வொரு மதத்துக்கு ஏற்ப வெவ்வேறு சட்டங்கள் எப்படி இருக்க முடியும்..?. ஒவ்வொரு மதத்தினருக்கும் நாடாளுமன்றமோ, சட்டசபைகளோ நிறைவேற்றிய ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும். என்று அவர் கூறினார்.