நற்றிணைப் பாடல் 62:
வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயா உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,
உள்ளினென் அல்லெனோ யானே ”முள் எயிற்று,
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்,
எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள்,
உரறு குரல் வௌ; வளி எடுப்ப, நிழல் தப
உலவை ஆகிய மரத்த
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது” எனவே?
பாடியவர்: இளங்கீரனார்
திணை: பாலை
பொருள்:
அன்று, பொருள் தேடச் சென்றபோது மலையில் ஒரு மாதத்துக்கு ஒருமுறை தோன்றும் முழுநிலாவைப் பார்த்ததும் நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு தோன்றும் இவள் முகம் நினைவுக்கு வரப் பெருமூச்சு விட்டுக்கொண்டு வருந்தினேன் அல்லவா? மீண்டும் வருந்த அப்படிச் செல்லவேண்டுமா? – இப்படித் தலைவன் தன் நெஞ்சோடு பேசுகிறான்.
பெருமூங்கில் வேரோடு வேர் பின்னிக்கொண்டு அந்த வளர்ந்திருந்தது. காற்று அடிக்கும் போது யானை பெருமூச்சு விடுவது போல இசை எழுப்பி அச்சுறுத்தியது. அது கோடைகாலம். மலைக்குன்றின் உச்சியில் நிலா தோன்றியது. அதனைப் பார்த்ததும் நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு இவள் தோன்றும் முகம் அன்று நினைவுக்கு வந்து வருந்தினேன். அங்கே இலை உதிர்ந்த நிலையில் உலவையாகி மரம் நின்றது. இவளும் அப்படி நிற்பாளே என்று எண்ணிக் கலங்கினேன். மீண்டும் சென்று கலங்கவேண்டுமா? மூங்கிலைப் போலப் பின்னிக்கொண்டு வாழவேண்டாமா?