• Tue. Feb 18th, 2025

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் அமைச்சர்களுடன் ஐஐடி அதிகாரிகள் ஆய்வு

ByP.Kavitha Kumar

Jan 18, 2025

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை அமைச்சர்கள் தலைமையில் ஐஐடி. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கடல் சீற்றம் காரணமாக திருச்செந்தூர் கோவில் முன்பு சுமார் 50 அடி தூரத்துக்கு, 8 அடி ஆழத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்கரையில் 50 அடி தூரத்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கம்புகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் பாறைகள் வெளியில் தெரிவதால் பக்தர்கள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஐஐடி. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அவர்களுடன் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை ஐஐடி. அதிகாரிகள் தமிழக அரசிடம் சமர்ப்பித்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.