சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம், மாணிக்கமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மாண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ஜோதிமணி, நகைக்கடன் பெறும் விதிகளை ஒன்றிய அரசு மாற்றி அமைத்துள்ளது, அவசர தேவைக்காக நம்பிக்கையாக நகைக்கடன் இருந்து வருகிறது. இப்போது நான் போட்டிருக்கிற நகை என்னோட அம்மாவோடது, இது எங்க அம்மாட்சியோட நகையாகக் கூட இருக்கலாம் எனக்கு தெரியாது. பரம்பரையாக இருக்கக் கூடிய நகைக்கு எவ்வாறு ரசீது வாங்குவது. விவசாயிகளுக்கு எல்லாவிதமான நெருக்கடியும் ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. வருகின்ற ஜூலை மாதம் நாடாளுமன்றம் கூட்டத் தொடர் நடைபெற இருக்கிறது. நிச்சயமாக நகைக்கடன் பிரச்சினையை எழுப்புவேன்.
இந்தியா கூட்டணியில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து நகைக்கடன் விதிமுறைகள் முன்பு இருந்தது போல எளிய முறையில் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புவோம் என்றார். எல்லா மக்களும் அவர்களது தாய்மொழி பழமையானது என்பதை நம்புவார்கள். ஒரு மொழியை தாழ்த்தியும், ஒரு மொழியை உயர்த்தியும் பேசினால் பிரச்சினை வருவது இயல்பு தான். நாம் நிற்க வேண்டியது தமிழ் ஒரு செம்மொழி. அது 2000, 3000 ஆண்டுகள் பழமையானது. அதற்கான வரலாற்று தரவுகளை நிறுவி இருக்கிறோம். இன்னொரு மொழியை சீண்ட வேண்டாம் என்பது கருத்து என்றார்.