காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞர் பரபரப்பு வாக்குமூல அளித்துள்ளார்.
ஆலந்தூர் காவலர் குடியிருப்புக்கு எதிரே வசித்து வந்த சதீஷ்(23) என்பவர் காதல் பிரச்சனையில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்தார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ரயில்வே காவல்துறையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், துரைப்பாக்கம் அருகே தலைமறைவாக இருந்த சதீஷை தனிப்படை போலீசார் நள்ளிரவு 12.30 மணியளவில் கைது செய்தனர்.
சதீஷிடம் மேற்கொண்ட விசாரணையில், சத்யாவும், சதீஷும் பல ஆண்டு காலமாக காதலித்ததும் பின்னர் சதீஷ் உடனான காதலை சத்யா முறித்துக் கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரயில் முன் தள்ளி சதீஷ் கொலை செய்தார் என்பது தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில், கைது செய்யப்பட்ட சதீஷின் தந்தை தயாளன்(67) ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். சத்யாவும் சதீஷூம் பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். பின்னர் சதீஷ் வேலைக்கு செல்லாமல் நண்பர்களோடு சேர்ந்து கஞ்சா பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் சதீஷை விட்டு சத்யா பிரிந்து வந்துள்ளார்.
சத்யா காதலை முறித்துக் கொண்டதற்கு பிறகு, வீட்டின் அருகே ஒரு முறை தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறி சதீஷ் சண்டை போட்டுள்ளார். இந்நிலையில் நேற்று, தன்னை மீண்டும் காதலிக்குமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் சதீஷ் கூற, சத்யா முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் சத்யாவை ரயில் முன் தள்ளியுள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.