• Sat. Apr 20th, 2024

நான் ஓய்வு பெறவில்லை.. செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு..!

ByA.Tamilselvan

Oct 25, 2022

நான் ஓய்வு பெறவில்லை. நான் டென்னிஸ் கோர்ட்டிற்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீராங்கனைகளில் ஒருவராக கருதப்படுபவர் செரீனா வில்லியம்ஸ். கடந்த 1995-ம் ஆண்டு தனது சர்வதேச டென்னிஸ் வாழ்க்கையை தொடங்கிய இவர் கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து டென்னிஸ் விளையாடி வருகிறார்.
இவர் மொத்தம் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். தற்போது 41 வயதை எட்டும் செரீனா வில்லியம்ஸ் டென்னிசில் அதிக ஆண்டுகள் கொடிகட்டி பறந்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். செரீனாவுக்கு ஒலிம்பியா என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் களம் திரும்பிய செரீனாவால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் கடந்த மாதம் நடந்தது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார். இதனால் அவர் அமெரிக்க ஓபன் போட்டியிலிருந்து வெளியேறினார். இதனால், செரீனாவை மீண்டும் டென்னிஸ் மைதானத்தில் காண முடியாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், விரைவில் டென்னிஸ் கோர்ட்டிற்குத் திரும்பப் போவதாக திடீர் அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் சான்பிரான்சிஸ்கோவில் செய்தியாளர் சந்திப்பின் போது கூறுகையில், ​ “நான் ஓய்வு பெறவில்லை. நான் திரும்புவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். நீங்கள் என் வீட்டிற்கு வரலாம். எனது வீட்டில் டென்னிஸ் மைதானம் உள்ளது. ஆனால் நான் இப்போது வரை ஓய்வு பற்றி எதுவும் நினைக்கவில்லை என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *