


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையுடன் பல்வேறு இடங்களில் விடிய விடிய சாரல் மழையும் பெய்தது..

சாத்தூர் அண்ணா நகர் படந்தாள் வெங்கடாசலபுரம் என் ஜி ஓ காலனி, எஸ் ஆர் நாயுடு நகர், பெரியார் நகர் ,மேட்டமலை ,வன்னிமடை, இருக்கன்குடி, நென்மேனி, கொல்லப்பட்டி, ஓடைப்பட்டி, பெத்துரொட்டிப்பட்டி, சத்திரப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்ட கிராமங்களிலும் இடியுடன் கூடிய பலத்த சூறாவளிக்காற்று மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின்சார தடை ஏற்பட்டது.

ஒரு சில கிராமங்களில் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி மின்சார மின்வாரிய ஊழியர்களுக்கு உதவினர். மேலும் இரவு முழுதும் பல்வேறு இடங்களில் மின்வாரிய ஊழியர்கள் பணியாற்றி மின்சாரம் வழங்கினர். எனினும் மேலும் பல்வேறு இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டு இரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோல் இன்று அதிகாலை முதல் மின் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதாகவும் விரைவில் மின்சாரம் இல்லாத பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் என்று மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.

