இந்து மதத்தின் கலாச்சாரத்துக்கும், இந்து பண்பாட்டுக்கும் எதிராக தமிழக அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு.
தூத்துக்குடியில் இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” திமுக தேர்தல் வாக்குறுதிகளில் என்ன சொன்னார்களோ, அதனை செய்வதற்கு தவறியிருக்கிறார்கள். சில பொய்யான தேர்தல் அறிக்கைகளைக் கூறி மக்களிடத்தில் வாக்குகளைப் பெற்றுவிட்டு, ஒருவருடம் ஆன பின்னரும்கூட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வாய் திறக்காமல் இருப்பது மிகப்பெரிய கண்டனத்துக்குரியது.
இந்து கலாச்சாரத்துக்கும், இந்து பண்பாட்டுக்கும் எதிராக இந்த அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் பொதுவான சமமான அரசாக இருக்க வேண்டும். அனைத்து மதத்தினருடைய நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும். ஒரு அரசாங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் எதிராக செயல்படுவது என்பது மிகவும் கண்டிப்புக்குரியது” என்று அவர் கூறினார்.