• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கடந்த 4 நாட்களில் ரூ.1.14 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

ByA.Tamilselvan

Aug 23, 2022

சென்னை விமானநிலையத்தில் ரு1.14 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் விமான நிலையத்தின் சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே ஆர் உதய் பாஸ்கர் தகவல்
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே ஆர் உதய் பாஸ்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : சுங்கத்துறையினருக்கு கிடைத்த உளவுத்தகவலின் படி, நேற்று முன்தினம் (21.08.2022) இலங்கையைச் சேர்ந்த 4 ஆண் பயணிகளிடம் சோதனை நடத்திய போது ரூ.59. 35 லட்சம் மதிப்புள்ள 1.310 கிலோ கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை இவர்கள் பசை வடிவில் மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு சோதனையின் போது ரூ.12.86 லட்சம் மதிப்புள்ள 784 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இந்த தங்கம் பயணிகள் இருக்கைக்குள் பசை வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது
இதே போல் கடந்த 20 ந் தேதி அன்று ரூ.17.89 லட்சம் மதிப்புள்ள 395 கிராம் தங்கமும், 19ந் தேதியன்று சென்னையில் உள்ள வெளிநாட்டு அஞ்சல்களுக்கான அஞ்சலகத்தில் இரண்டு பார்சல்களில் 31 தங்கக்கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு பார்சல் சீனாவில் இருந்தும், மற்றொரு பார்சல் பிரிட்டனில் இருந்தும் வந்திருந்தன. உரிமை கோரப்படாத இந்த பார்சல்களில் ரூ.22.49 லட்சம் மதிப்புள்ள 420 கிராம் 24 காரட் சுத்த தங்கக்கட்டிகள் இருந்தன. இவற்றை சுங்கத்துறையினர் கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 18ந் தேதியன்று ரூ.24.72 லட்சம் மதிப்புள்ள 540 கிராம் எடையுள்ள தங்கக்கட்டியும், சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களில் ரூ.1.14 கோடி மதிப்புள்ள 2.52 கிலோ கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.