சோழவந்தான் பகுதியில்தொடர் மழை காரணமாக மழையில் நனைந்தும் குடை பிடித்தும் பள்ளி சென்ற மாணவிகள் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களிலும் பள்ளிக்கு வந்தனர்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்த வண்ணம் உள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி பகுதிகளிலும் நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்த நிலையில் மதுரை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கவில்லை. இதன் காரணமாக இன்று காலை முதல் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்த படியும் குடை பிடித்த படியும் பள்ளிக்கு சென்றனர். மேலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் ஒரு சில இடங்களில் ஆட்டோகளிலும் இருசக்கர வாகனங்களில் மாணவ, மாணவிகளை அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றனர். பல்வேறு சங்கங்கள் மதுரை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தவாறு சென்றனர்.