அந்தமானில் உள்ள நாகோ தீவில் நடுக்கடலில் அந்தரத்தில் தொங்கி பின்னர் கடலில் விழுந்த ஜோடி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தற்போது சுற்றுலா செல்பவர்கள் மிக உயரத்தில் இருந்து பாதுகாப்புடன் கீழே குதிப்பது மிகவும் பிரபலமாகிவிட்டது. அதற்காகவே பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அந்த வகையில் அந்தமான் சென்ற ஜோடி கயிறு அறுந்து அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தை சேர்ந்த அஜித் காதத் மற்றும் சரளா தம்பதி அந்தமான் அருகே உள்ள நாகோ தீவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு தனியார் நிறுவனம் நடத்தும் நடுக்கடலில் சாகச விளையாட்டுகளில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் படகில் கயிறுடன் இணைக்கப்பட்ட பாராசூட்டில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென கயிறு அறுந்து விட்டது. அதனைத் தொடர்ந்து அந்தரத்தில் அந்த ஜோடியினர் உயிர் பயத்தில் அலறி கொண்டிருந்தனர்.இறுதியாக பாராசூட் கடலில் இறங்கிய போதிலும், லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் தண்ணீரில் மூழ்கவில்லை. இதையடுத்து, சுற்றுலா நிறுவனத்தின் காவலர்கள் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.