மதுரை திருப்பரங்குன்றம் கோயில் அருகே உள்ள மூலக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி அருகே, கல்லூரி மாணவர்கள் இரு கும்பலாகப் பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலின் போது கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிலர் தாக்க முயன்றதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மூலக்கரை பேருந்து நிறுத்தம் அருகே கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென மோதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த சிலர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மற்றொரு தரப்பினரை விரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அப்பகுதியில் இருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து அலறியடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் இருந்த போலீஸ் வாகனத்தில் அவசர சைரன் ஒலிக்கப்பட்டதும், ஆயுதங்களுடன் வந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான முழுக் காட்சிகளும் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள நிலையில், அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.



