தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான சி. குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கபடி, கோகோ, வளைபந்து , எறிபந்து உள்ளிட்ட போட்டிகளில், ஆண்டிபட்டி, வைகை அணை ராஜதானி, ஒக்கரைப்பட்டி, எஸ்.கே.ஏ , இந்து மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 21 பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர் .
கடந்த மாதம் 24 ஆம் தேதி துவங்கிய இந்த போட்டிகளின் இறுதிப் போட்டிகள் நேற்று நடந்தது. இந்த போட்டிகளை பாலக்கோம்பை மேல்நிலைப்பள்ளி நடத்துகிறது. நேற்று நடந்த கபடி இறுதி போட்டியில் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், பாலக்கோம்பை மேல்நிலைப்பள்ளி அணிகளும் மோதின. இதில் 32 புள்ளிகள் பெற்று ஆண்டிபட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. பாலக்கோம்பை அணி 20 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பெற்றது. தொடர்ந்து வரும் 13ஆம் தேதி ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தடகளப் போட்டிகள் நடைபெற்று, அன்று பரிசளிப்பு விழா நடைபெறும் என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.