• Sat. Apr 20th, 2024

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்..!

Byவிஷா

Mar 13, 2023

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது.
தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்களிலேயே மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலமாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்ற விழா பூச்சொரிதல் விழா ஆகும். மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம்.


மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காவும், தன்னை தரிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும் தீவினைகளும் அணுகாது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க மரபுமாறி அம்மனே பக்தர்களுக்கு 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாக கடைசி ஞாயிறு வரை இருப்பது தனிச்சிறப்பு ஆகும்.
இந்நிலையில், நேற்று 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், வாஸ்து சாந்தி முடிந்து காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் சமயபுரம் மாரியம்மனுக்கு காப்பு கட்டு கட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் யானை மீது பூக்களை கொண்டு வந்த கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பூக்களை கூடைகளில் தலையில் சுமந்தும், கையில் ஏந்தி வந்து அம்மனுக்கு சாத்தினர்.
மேலும் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்வேறு வாகனங்களிலிருந்து அம்மனுக்கு இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை கொண்டு வரவுள்ளனர். இந்த பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணியிலிருந்து இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கட்டணம் கிடையாது என கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *