கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று காலை இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு சுமார் 25 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் உபரிநீரக வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு நேற்று மாலை வினாடிக்கு சுமார் 28 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது அதிகரித்து இன்று காலை வினாடிக்கு சுமார் 50 ஆயிரம் கனஅடியாக அதாகரித்துள்ளது.
நீர்வரத்தால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி ஐந்தருவி பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. மேலும் காவிரி வனப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 10ந்தேதி முதல் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருந்த நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன் நீர் வரத்து குறைந்து வந்த நிலையில் கடந்த 18ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு பரிசல் இயக்க மட்டும் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் பரிசலில் செல்ல இன்று மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுற்றுலாப்பயணிகள் குளிக்க பரிசல் இயக்க தடை விதிக்கபட்டுள்ளதால் அருவிக்கு செல்லும் நுழைவு வாயில் பூட்டபட்டு காவல்துறை தீயணைப்புதுறையினர் பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.