வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயத்தின் ஆண்டு பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை நாகை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்.
கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கப்படும் உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயத்தின் ஆண்டுப்பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வேளாங்கண்ணி நகரில் திருவிழாவிற்கு பொது மக்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட வழித்தடங்கள் , சுகாதாரத் தூய்மை பணிகள், தற்காலிக அரசு பேருந்துகள் நிறுத்துமிடம் மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்கள்,ஆகியவற்றில் உள்ள மின் விளக்கு வசதிகள் குறித்தும் பார்வையிட்டார். மேலும் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை வசதிகள் மற்றும் சுகாதாரத் துறை சார்பில் குளோரினேசன் செய்யப்பட்டுள்ள இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகளையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார்.மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு இடங்களில் போதிய கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தவும் ஆட்சியர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது நாகை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்பாபு, உதவி பங்கு தந்தை ஆண்டோ ஜேசுராஜ், உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.