சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்தாமரைகுளம், (ஜன. 17)சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா இன்று 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் தை திருவிழா இன்று 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை 6.30 மணிக்கு தலைமை பதி தலைமை குரு பால பிரஜாபதி அடிகளார் திருக்கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதலும் நடந்தது. 2ம் நாளான இரவு அய்யா மயில்வாகனத்தில் பவனி வருதல் அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வருதல், 4ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதல், 5ம் நாள் பச்சை சாத்தி சப்பர வாகனத்தில் பவனி வருதல், 6ம் நாள் வாகன பவனியும், 7ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது.வரும் 24-ம் தேதி 8ம் திருவிழாவில் அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு, தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது. 9ம் நாள் இரவு அனுமன் வாகன பவனி, 10ம் திருவிழாவான 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனி, 11ம் திருவிழாவான 27-ம் தேதி திங்களன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து திருக்கொடி இறக்கமும் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் அய்யா வைகுண்டர் கலையரங்கத்தில் தினமும் அய்யாவழி சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அனைத்து சிறப்பு பணிவிடைகளையும் தலைமை குரு பால பிரஜாபதி அடிகளார் தலைமையில் குருமார்கள் பால. ஜனாதிபதி, பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்ல வடிவு, ஜனா. யுகேந்த் வந்த, ஜனா. வைகுந்த், நேம்ரிஷ் செல்லா, அம்ரிஷ் செல்லா, கவுதம் ராஜா ஆகியோர் செய்கின்றனர்.