• Fri. Apr 19th, 2024

தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கும், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலாகிறது. இரவுநேர ஊரடங்கின்போது மாநிலத்திற்குள் தனியார் மற்றும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, பேருந்து, ரயில், விமானங்களில் பயணம் செய்வதற்காக செல்பவர்கள் தகுந்த பயணச்சீட்டுடன் வாகனங்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணிகளான பால், பத்திரிகை விநியோகத்துக்கும், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவ பரிசோதனை கூடங்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை. வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகன போக்குவரத்துக்கும், பெட்ரோல் பங்குகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *