சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாண்டியன் தியேட்டர் அருகே அரசு மதுபானகடை பாருடன் இயங்கி வருகிறது. இந்த மதுபான கடைக்கு நேற்று ஒருவர் தனது நண்பர்களுடன் நான்காவது படிக்கும் தனது 7 வயது மகனையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.
கடையில் மதுபாட்டில் வாங்கிவிட்டு பாருக்குள் நுழைந்து மகனை அருகிலேயே அமர வைத்து விட்டு நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.
இதனை அங்கு மது குடித்துக் கொண்டிருந்த ஒருவர், தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
தற்போது இக்காட்சி வலைத்தளங்களில் வைரலாக பரவி அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே குடும்பத்தில் ஒழுக்கமாக வளர்க்கக்கூடிய பிள்ளைகளே தடம் மாறிச் சென்று இளமையிலேயே தங்களது வாழ்க்கையை இருள் மயமாக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து வாழ்க்கையில் வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல வழி காட்டியாக இருக்க வேண்டிய தந்தையே, தனது மகனின் பிஞ்சு உள்ளத்தில் நஞ்சை விதைப்பது போன்ற செய்கையை, இந்த வீடியோ பதிவில் பார்ப்பவர்களின் மனதில் வேதனையை பதித்துள்ளது. இதனை பார்க்கும் போது, தற்போது உள்ள சூழ்நிலையில், பாடம் கற்பிக்க வேண்டியது பிள்ளைகளுக்கு அல்ல, பெற்றோர்களுக்குத் தான் என்பதை சொல்லாமல் உணர்த்துகிறது இந்த வீடியோ பதிவு.