மதுரை மாவட்டத்தில் இயங்கும் ஒன்வே டாக்சி சேவையால் அனைத்து வகையான தனியார் கால் டாக்சி மற்றும் வாடகை வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் காவல்துறையினர் கால் டாக்சி ஓட்டுனர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதாகவும் கூறி மதுரை மாவட்ட வாடகை கார் ஓட்டுனர்கள் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறைக்கு எதிராகவும், ஒன்வே டாக்சி நிறுவனத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தியின் காரின் முன்பாக கோரிக்கையை நிறைவேற்ற கோரி காரை நிறுத்தி மனு அளித்தனர். இதனையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை போனில் தொடர்பு கொண்டு பேசி காவல்துறையினர் வழக்குபதிவு செய்ததற்கான காரணம் குறித்தும், கார் ஓட்டுனர்களின் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து போராட்ட பகுதிக்கு சென்ற அமைச்சர் ஓட்டுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பினரின் கருத்துகளை கேட்ட பின் நல்ல முடிவு சொல்வதாக கூறி சென்றார்.
இதனையடுத்து அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கைதட்டி ஆரவாரம் எழுப்பி நன்றி தெரிவித்து பின்னர் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.