ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி பகுதியில் தனியார் கல்குவாரியில் வெடி வைக்கும் போது கற்கள் பறந்து விழுந்தும், குவாரி லாரிகளால் கல்தூசி பறந்தும் விவசாய நிலங்களில் படிந்து விளைச்சல் பாதிக்கப்படுவதாக புகார் கூறி, கல்குவாரிக்குச் செல்லும் பாதையில் கற்களை போட்டு மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமாதானப்படுத்த வந்த போலீசாருடன் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேக்கம்பட்டி பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட கல் மற்றும் கிராவல் குவாரிகள் உள்ளன.
இவற்றில் கானாவிளக்கு கண்டமனூர் சாலையில் தேக்கம்பட்டி பிரிவிலிருந்து வைகை ஆறு செல்லும் வழியில் உள்ள கல் மற்றும் கிராவல் குவாரியில் இருந்து தயாரிக்கப்படும்.
ஜல்லிக்கற்கள் மற்றும் கிராவல் ஆகியவை இரண்டு கிலோ மீட்டர் தூரம் விவசாய நிலங்களின் நடுவே உள்ள பாதை வழியாக பிரதான சாலைக்கு கொண்டு வரப்படுகிறது. வரும் வழியில் இருபுறங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய விலை நிலங்களில், குவாரி லாரிகளில் இருந்து வெளிவரும் தூசிகளால் விவசாய பயிர்கள் முழுவதும் பாதிக்கப்படுவதாகவும், விளைச்சல் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
மேலும், கல்குவாரியில் இருந்து வெடி வெடிக்கும் போது வெளிவரும் கற்கள் தூசுக்கள் ஆகியவை விவசாய நிலங்களில் நிரந்தரமாக படிந்து விளை நிலங்களை சேதப்படுத்துகின்றன.
மேலும், கல்குவாரியில் இருந்து பறந்து வரும் கற்கள் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் மற்றும் தோட்டப்பணியில் ஈடுபடும் விவசாயிகள் மீதும் விழுந்து காயங்கள் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது.
இது குறித்து பலமுறை இப்பகுதி விவசாயிகள் குவாரி உரிமையாளர்கள் கனிம வளத்துறையினர், காவல்துறையினர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் கடும் கோபம் அடைந்த விவசாயிகள் இன்று குவாரிக்கு செல்லும் பாதையில் கற்கள், கட்டைகள், முட்களைப் போட்டு வழிமறித்து பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாதையில் போட்டு அடைத்து இருந்த கற்கள் கட்டைகளை எடுக்க முயற்சித்தனர். அப்போது பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் போலீசாருடன் கற்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட சமாதான பேச்சுக்கள் தோல்வில் முடிவடைந்ததை அடுத்து விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகளின் போராட்டத்தால் இன்று தேக்கம்பட்டி அடக்கம்பட்டி பகுதியில் உள்ள கல் மற்றும் கிராவல் குவாரிகள் செயல்படவில்லை.
மேலும் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.