• Sat. May 11th, 2024

முன்னாள் சுகாதாரத்துறைஅதிகாரியின் குடும்பத்தினர் வறுமை காரணமாக தற்கொலை – சில வாரங்களாக குடிநீர் மட்டுமே குடித்து வாழ்ந்த பரிதாபம்…

ByKalamegam Viswanathan

Aug 18, 2023

மதுரை மாநகர் தாசில்தார்நகர், அன்பு நகர் ராஜராஜன் தெருவை சேர்ந்த பாண்டியன் என்ற மருத்துவர் சுகாதாரத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது மருத்துவர் பாண்டியன் தனது மனைவி வாசுகி மற்றும் மகள் உமாதேவி (45) மகன் கோதண்டபாணி (42) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவர் பாண்டியன் மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேறிய நிலையில் பாண்டியனின் மனைவி வாசுகி மற்றும் திருமணமாகாத நிலையில் மகள் உமாதேவி (45) மகன் கோதண்டபாணி (42) ஆகிய மூவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

பாண்டியன் பிரிந்துசென்ற விரக்தியில் இருந்த குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளயே முடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக வீட்டிற்குள்ளயே இருந்த காரணமாக உரிய வருமானமின்றி வீட்டில் பணத்தை செலவு செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகை மற்றும் பொருட்களை விற்று அந்த பணத்தில் இருந்து சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உணவிற்கு வழியின்றி வறுமை ஏற்பட்டுள்ளது. இதனால் மின் கட்டணம் செலுத்தாத நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இருட்டிலயே வசித்து வந்துள்ளனர். மேலும் வீட்டில் மோட்டார் பயன்படுத்த முடியாத நிலையில் தண்ணீர் இன்றி இயற்கை உபாதைகளுக்கு கூட செல்ல முடியாத நிலையில் வசித்து வந்ததோடு அவ்வபோது வாரத்திற்கு ஒரு முறை மட்டும் குடிநீரை வாங்கி அதனை குடித்தே வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீரும் வாங்காத நிலையில் வீடு பூட்டியே கிடந்துள்ளது.

இதனையடுத்து இன்று காலை வீட்டை சுற்றிலும் கடுமையான துர்நாற்றம் வீசிய நிலையில் அருகில் இருந்த பொதுமக்கள் அண்ணாநகர் காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை திறந்து பார்த்தபோது கோதண்டபாணி தூக்கில் தொங்கிய நிலையிலும், வாசுகி மற்றும் உமாதேவி ஆகிய இருவரும் விஷம் அருந்தி உயிரிழந்த நிலையில் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.

இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குறித்து தடயவியல் கைரேகை நிபணர்கள் ஆதாரங்களை எடுத்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் சினேகபிரியா தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அழுகிய நிலையில் இருந்த மூன்று சடலங்களையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மருத்துவர் பாண்டியன் உடன் பணிபுரிந்த செவிலியர் ஒருவருடன் பழனியில் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. இதை எடுத்து அவரிடம் விசாரணை செய்ய முடிவு செய்தனர். அவரை போனில் தொடர்பு கொள்ள முடியாததால் பாண்டியனை அழைத்து வர பழனிக்கு சென்றுள்ளனர்.

மருத்துவர் பாண்டியன் வந்த பின்பு தான் முழு விவரமும் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *