அ.இ.அ.தி.மு,க.வின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவும் சிறைவாசம் சென்றதன் காரணமாக கட்சி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் தலைமையில் செயல்பட்டு வந்தது. இவர்களது தலைமையில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் மற்றும் ஊராட்சி மன்ற தேர்தலை சந்தித்த நிலையில், நான்கு வருடம் சிறைவாசம் அனுபவித்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் வெளியில் வந்தார். அவர் வெளிவந்த நாளிலிருந்தே பல அதிரடி நடவடிக்கைகள் ஏற்படுமென்று அனைவரும் எதிர்பார்த்தனர். உடனடியாக எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்காமல் அமைதியாக இருந்தார் சசிகலா. அவ்வப்போது அமமுக வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆர் இதழில் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி வந்தார் சசிகலா.
அந்த வகையில் இன்று எல்லோரும் நம் பிள்ளைகள் தான் என்ற தலைப்பில் சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கட்சி வீணாவதை ஒரு நிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். எல்லாரும் அ.இ.அ.தி.மு.க.வின் பிள்ளைகள்தான். புரட்சித்தலைவர் எப்போதுமே கட்சி வித்தியாசமே பார்க்க மாட்டார். இவர்களா? அவர்களா? என்றெல்லாம் பார்க்க மாட்டார். அதையெல்லாம் பார்த்து தான் வளர்ந்து வருகிறோம். என்னை பொருத்தவரை எல்லாரும் ஒன்று தான், எல்லாருமே நம் பிள்ளைகள் தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தொண்டர்களின் இயக்கம். அதனை எப்போதும் தொண்டர்கள் நிரூபித்துக் காட்டுவார்கள்.
கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தொண்டர்களிடம் ஒரு தாய் போல் அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும். இப்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை, விரைவில் வருகிறேன் எல்லோரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியலில் வரும் காலங்களில் சசிகலாவின் செயல்பாடுகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
