• Fri. Apr 19th, 2024

நம்பி ஏமாந்தது போதும் …30 ஆண்டுகள் கழித்து முதல் முறை வாக்களித்த நபர்

நடிகர் ரஜினிகாந்துக்காக 30 ஆண்டுகளாக வாக்கு செலுத்தாமல் இருந்துவந்த அவரது ரசிகர் மகேந்திரன் இன்று அவரது முதல் வாக்கை செலுத்தியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை அருகே ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 30 ஆண்டுகள் கழித்து தனது முதல் வாக்கினை இன்று செலுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன்(48). இவர் சிறு வயது முதலே நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருந்துவந்தார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று பல ஆண்டுகளாக அவரது ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. இதனால் அவர் தொடக்க காலம் முதலே ரஜினிக்குதான் வாக்களிக்க வேண்டும் என்று யாருக்கும், எந்த தேர்தலிலும் வாக்களிக்காமல் காத்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இதனை கேட்டு மகிழ்ந்த மகேந்திரன் தனது சிறுவயது முதலான கனவு நிறைவேறப்போவதாக சந்தோஷப்பட்டுள்ளார்.

2021ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை, அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று அறிவித்தார். இதனை கேட்டு மனவேதனையடைந்த மகேந்திரன் பெரிதும் ஏமாற்றமடைந்தார். ரஜினிக்காகவே தனது வாக்கினை செலுத்தாமல் இருந்த மகேந்திரன் இந்த ஆண்டு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக வாக்கு செலுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *