சென்னை புழல் சிறையில் உள்ள தனது மகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த 75 வயது முதியவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

மதுரை காமராஜபுரம், திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி (75). இவரது மகன் காளிமுத்து (என்ற) வெள்ளைக்காளி, தற்போது சென்னை புழல் சிறையில் தண்டனை கைதியாக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாகச் சில நபர்கள் திட்டமிட்டுத் தனது மகன் குறித்துச் செய்தித்தாள்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகளைப் பரப்பி வருவதாக ஜெயக்கொடி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த புகார் மனுவில், “எனது மகன் எதிர்காலத்தில் தனது குடும்பத்துடன் இணைந்து நல்முறையில் வாழ வேண்டும் என்ற நற்பெயரில் உள்ளார். ஆனால், சில நபர்கள் அவரது பெயருக்குக் களங்கம் விளைவிக்கவும், அவரது எதிர்காலத்தைச் சிதைக்கவும் வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்,.
மேலும், அவதூறு பரப்பும் நபர்களுக்கும் தனது மகனுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், தொடர்ச்சியாக இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்,.




