• Fri. Apr 19th, 2024

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆங்கிலப்புத்தாண்டுகொண்டாட்ட நிகழ்ச்சிகள்

உலகம் முழுவதும் உள்ள மக்கள் எல்லோரும் 2022-ம் ஆண்டை கோலாகலமாக வரவேற்க தயாராக உள்ள நிலையில் ஜீ தமிழ் டிவி தனது நேயர்களுக்கு பிரமிப்பூட்டும் தொடர் நிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஜன., 1ம் தேதி வழங்க உள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்கள், ஜீ தமிழ் தொலைக்காட்சி பாரம்பரியமான விவாத நிகழ்ச்சியான – ‘பட்டிமன்றம்’ மூலம் இனிதே துவங்குகிறது. காலை 9 மணிக்கு கலைமாமணி விருது பெற்ற சுகி சிவம் தலைமையில்’வெள்ளையர்களின் வருகைக்குப் பின் நாம் அதிகம் பெற்றோமா? அல்லது அதிகம் இழந்தோமா?’ என்கிற தலைப்பில் சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம் நடக்கிறது. பர்வீன் சுல்தானா, சாந்தாமணி, டாக்டர். சுந்தர ஆவுடையப்பன், கே சரவணன், சுசித்ரா, மற்றும் மோகன சுந்தரம் ஆகிய பிரபலங்கள் பங்கேற்று, நேயர்களின் மனம் கவரும் வகையில் விவாதிக்கவுள்ளனர்.

காலை 10 மணிக்கு ஆக்ஷன் திரைப்படமான ‘கொரில்லா’ படம் ஒளிபரப்பாகிறது. ஒரு சிறு குற்றவாளி, நடிகராகத் துடிக்கும் ஒரு நபர், சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் மற்றும் வங்கியால் கடன் மறுக்கப்பட்ட ஒரு விவசாயியின் கூட்டாளி – ஆகிய நான்கு நண்பர்களின் வாழ்க்கைப் பயணத்தை இத்திரைப்படம் பேசுகிறது. டான் சாண்டி இயக்கி உள்ள இந்த படத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு, சதீஷ் ஆகியோருடன் சிம்பான்சி குரங்கு ஒன்றும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது.

இதையடுத்து இசைப்போட்டி நிகழ்ச்சியான ‘சவுண்ட் பார்ட்டி’ ஒளிபரப்பாகவுள்ளது. இதில், நடிகர் வைபவ், நடிகை பார்வதி நாயர், இயக்குனர், நடிகர் பாண்டியராஜன், சம்யுக்தா சண்முகநாதன், ரித்திகா மற்றும் சோம் சேகர் ஆகியோர் பங்கேற்று, கேளிக்கை நிறைந்த சுவாரஸ்யமான சவால்களை சந்திக்கவுள்ளார்கள். நேயர்கள் இந்த ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியினை மதியம் 12:30 மணிக்குக் காணலாம்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் அடுத்த ஒன்றரை மணிநேரமும் சிந்திக்கத் தூண்டும் போட்டிகளைக் கொண்ட விளையாட்டு நிகழ்ச்சியான ‘ரன் பேபி ரன்’ ஒளிபரப்பாகும். பிற்பகல் 2 மணி முதல் ஒளிபரப்பாகவுள்ள இந்த விளையாட்டு நிகழ்ச்சியினை, நடிகர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஜகன் நகைச்சுவையான பல சவால்களுடன் தொகுத்து வழங்க; பிரபல கலைஞர்கள் மிதுன், புவியரசு முத்துசாமி, நந்தா மாஸ்டர், சர்வைவர் ஐஸ்வர்யா கிருஷ்ணன், தர்ஷனா & அஷ்வினி ராதாகிருஷ்ணா உள்ளிட்டோர் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாக, நேயர்களுக்கு விருந்தாக, பிற்பகல் 3:30 மணிக்கு உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ‘டக் ஜெகதீஷ்’ திரைப்படம், ஜீ தமிழில் திரையிடப்படவுள்ளது. சிவா நிர்வானா எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் நானி கதாநாயகனாகவும், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். குடும்ப பாசமும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் நிறைந்து இந்த படம் உருவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *