
தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் டி. கே. பட்டம்மாள் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், இவரது பேத்தி ஆவார்.இவர் கான சரஸ்வதி என்றும் இசைப் பேரரசி என்றும் சங்கீத சரஸ்வதி என்றும் பொதுவாக அழைக்கப்படுகிறார். அலமேலு என்ற இயற்பெயருடைய “பட்டா” எனச் செல்லமாக அழைக்கப்பட்ட பட்டம்மாள் தமிழ்நாடு காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள தாமல் என்ற ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். பட்டம்மாள் முறையாக கர்நாடக இசையை கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சிறு வயதிலேயே தனது தந்தை சொல்லிக்கொடுத்த பக்திப் பாடல்களைப் பாடுவார். தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம் சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொண்டு 1929 ஆம் ஆண்டில் தனது 10வது அகவையில் முதற்தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகு தான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. அதன் பின் 1932 இல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார். பின்னர் காங்கிரஸ் கூட்டங்களில் நிறைய பாட ஆரம்பித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைத் தமது மேடைக் கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடிவந்தார். பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி மற்றும் முத்துத் தாண்டவர் பாடல்களையும் பதங்களையும் பாடி தமிழ் பாடல்களின் சிறப்பை பறைசாற்றினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கர்நாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் ‘பெண் மும்மூர்த்திகள்’ என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் இவரும் ஒருவர். மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் ஆவார்கள்.சங்கீக நாடக அகாடெமி, பத்ம பூஷண், பத்ம விபூஷண், சங்கீத கலாசிகாமணி போன்ற பல விருதுகளை வாங்கிய இசையின் பேரரசி டி. கே. பட்டம்மாள் பிறந்த தினம் இன்று..!