தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய அமெரிக்கரும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக் கழகத்தின் உயிரியலாளரும் ஆனவர் வெங்கி ராமகிருஷ்ணன் என அழைக்கப்படும் சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். வெங்கட்ராமன் 1952ல் சிதம்பரத்தில் சி. வி. ராமகிருஷ்ணன், ராஜலட்சுமி தம்பதிகளுக்குப் பிறந்தார். அவரது தந்தையின் பணி காரணமாக குஜராத்திற்கு இடம் பெயர்ந்த வெங்கட்ராமன் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை அங்குள்ள வடோதரா நகரில் கிருத்தவப் பள்ளி ஒன்றில் பயின்றார். இயற்பியலில் பட்டப்படிப்பை பரோடா, மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் 1971 ஆம் ஆண்டில் முடித்து, பின்னர் 1976ல் ஐக்கிய அமெரிக்காவில் ஒகையோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். தன் பள்ளிப்பருவத்தில் தேறிய நாட்டளவிலான அறிவியல் திறனறி உதவித்தொகைத் தேர்வு ராமகிருஷ்ணனை அறிவியல் நோக்கி ஈடுபாடுகொள்ளத் தூண்டியது. “ரைபோசோம் (ribosome) எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காக” வெங்கட்ராமனுக்கும் தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் அடா யோனட்ஸ் ஆகியோருக்கும் 2009 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருக்கு 2011 டிசம்பர் 31ல் பிரிட்டன் அரசு சர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. திறமை மிகுந்த இந்திய உயிரியலாலளர் வெங்கி ராமகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று..!