• Fri. Mar 29th, 2024

உத்திரபிரதேச வன்முறை எதிரொலி.., நேரடியாக களமிறங்கும் உச்சநீதிமன்றம்..!

Byவிஷா

Oct 7, 2021

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த வன்முறைதான் தற்போது நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணை நடத்த இருப்பதுதான் பரபரப்பான விஷயமே!

உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, அவரது மகன் மற்றும் உத்தரபிர பிரதேச துணை முதல்வர் ஆகியோர் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போது, அவர்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினார்கள். அப்போது, அங்கு காரில் வந்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் கூட்டத்தில் காரை மோத செய்தார்.


இதன்பினர் இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. பாஜக தொண்டர்களுக்கும், விவசாயிகளுக்கும் மோதல் மூண்டது. இதில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் கூட்டத்தில் காரை மோத செய்ததாக கூறப்படும் வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


முதல் ஆளாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி லக்கிம்பூருக்குச் செல்ல முயன்றபோது போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதன்பின்னர் தனது மனதை மாற்றிய உத்தரபிரதேச அரசு தலைவர்களை லக்கிம்பூர் செல்ல அனுமதித்தது. இதன் பின்னர் பிரியங்காகாந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி உள்ளிட்டோர் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் லக்கிம்பூர் சென்று லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.


நாடு முழுவதும் லக்கிம்பூர் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் அருண் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரது மகனை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணை நடத்த இருக்கிறது .உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக வழக்கை இன்று விசாரிக்க இருக்கிறது, அஜய் மிஸ்ராவின் மகன் மீது விவசாயிகள் கொலை குற்றம் சுமத்தி வரும் நிலையில் உச்சநீதிமன்ற விசாரணை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *