கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதி, சென்னை உள்ளிட்ட பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்ட நிலையில், தற்போது திருவாரூரில் நில நடுக்கம் ஏற்பட்டதாக வெளியான தகவலால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரில் இன்று காலை 11 மணி அளவில் பயங்கர சத்தத்தோடு வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனையடுத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருப்போர் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் நின்றனர். இந்த பயங்கர சத்தமானது திருவாரூர் மட்டுமல்லாமல் கொரடாச்சேரி, கண்கொடுத்தவணிதம், பூந்தோட்டம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டது. மேலும் அருகே உள்ள மாவட்டங்களான காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்திலும் இந்த வெடி சத்தம் கேட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒருவித பதற்றமான சூழ்நிலை நிலவியது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் கூறுகையில் நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லையென தெரிவித்தனர். தஞ்சாவூர் – கோடியக்கரை வான்வெளியில் சென்ற ஜெட் விமானம் பயிற்சி மேற்கொண்டதால் அதிக சத்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினர்.