முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதில் புத்தாண்டு தினத்தன்று தன்னை யாரும் சந்திக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
புத்தாண்டு தினத்தையொட்டி மக்களுக்குபுத்தாண்டு வாழ்த்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது புத்தாண்டு வாழ்த்து அறிக்கையில், புத்தாண்டு தினத்தன்று தன்னை யாரும் சந்திக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். தி.மு.க வின் வெற்றிக்காக அயராமல் உழைத்த கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் பலரும் தன்னை நேரில் சந்திக்க எண்ணும் உள்ளார்ந்த எண்ணத்தை தன்னால் உணர்ந்துக்கொள்ள முடிகிறது எனவும், ஒமிக்ரான் தொற்றை மனதில் வைத்து அனைவரும் கவனமாக செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கொரோனா இரண்டாம் அலையின் பெரும்தாக்கத்தில் தமிழ்நாடு தவித்த நேரத்தில் ஆட்சிப்பொறுப்பை ஏற்று, அதனைத் திறம்படக் கட்டுப்படுத்தியதுபோல, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பையும் பொதுமக்களின் ஒத்துழைப்பையும் எதிர்நோக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
எனவே அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, கண்ணியம் மிக்க கழகத் தொண்டர்களாகக் கடமைகளை மேற்கொள்ளுங்கள் எனவும் அதுவே அனைவரும் வழங்குகிற சிறப்பான புத்தாண்டுப் பரிசு எனவும் அவர் கூறினார். மேலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல் ஆங்கிலப் புத்தாண்டு இது என்றாலும், இனி வரும் காலங்களும் கழகத்தின் புத்தாண்டுகளாகவே இருக்கும் என்கிற உறுதியான நம்பிக்கையை அளித்து தனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.